டில்லி

னநாயகம் மற்றும் கூட்டாட்சி முறையை அடியோடு மறந்து விட்டு பாஜக அரசு செயல் படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

கொரோனா பாதிப்பு, நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து நேற்று எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது.  இந்த ஆலோசனைக் கூட்டம் காணொளி மூலம் நடந்தது.  இதில் 22 எதிர்க்கட்சிகள் கலந்துக் கொண்டன.

இந்த கூட்டத்தில் திமுக, திருணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதாதளம் போன்ற 22 கட்சிகள் பங்கேற்றன.  ஆனால் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகள் பங்கேற்கவில்லை.   இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக அம்பன் புயலால் மேற்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் ஏற்பட்டுள்ள சேதத்தைத் தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தனது உரையில், ”மத்திய அரசு எந்த காரணத்திற்காக ஊரடங்கை அமல்படுத்துகிறோம் என்பது தெரியாமலேயே செயல்படுத்தி உள்ளது. இப்போது, அதில் இருந்து வெளியேறுவதற்கான திட்டமும் இல்லாமல் திணறி வருகிறது. வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 13 கோடி குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி ஒதுக்காமல் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு புறக்கணித்துள்ளது.

கடந்த 12ம் தேதி அன்று பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டமும், அதற்கு அடுத்த 5 நாட்கள் அதன் தொகுப்பு குறித்து நிதியமைச்சர் அறிவித்த விவரங்களும் நாட்டில் நடந்த மிகக் கொடூரமான நகைச்சுவை ஆகும்.  தற்போதைய நிலை குறித்து விவாதிக்க நாடாளுமன்றமோ அல்லது நாடாளுமன்ற நிலைக் குழுவோ அழைப்பு விடுப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.
இந்த அரசு தான் ஜனநாயக முறையில் நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்வதைக் கூட கைவிட்டு விட்டது.  இப்போது பிரதமர் அலுவலகமே அதிகார குவியல்களின் மையமாக விளங்குகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமலும்,  மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமலும் தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்வதும், பொதுத்துறை நிறுவனங்களை விற்பதுமாக அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. இந்த போக்கை எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டிக்கின்றன.

நாட்டில் 2020-21ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என்றும், இதனால் பேரழிவு உண்டாகும் என்றும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால்  இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று அரசு கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.  மத்திய பாஜக அரசுக்கு ஏழைகள் மீது எந்த விதமான கருணையும் இரக்கமும் இல்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
பாஜக அரசு நாட்டின் அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த அம்சமான கூட்டாட்சி முறையை அடியோடு மறந்து ஜனநாயகத்தை அறவே கைவிட்டு விட்டது. அதே வேளையில் ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பதும், கருத்துகளைத் தெரிவிப்பதும், மக்களின் குரலாக ஒலிப்பதும் எதிர்க்கட்சிகளின் கடமை என்னும் அடிப்படையிலேயே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளான ஏழைகளுக்கு இலவச உணவு, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பப் பேருந்து ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட அனைத்தும் செவிடர் காதில் ஊதிய சங்கு போல் இருக்கிறது. தொடர்ந்து 7 காலாண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முன் எப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்த போதே, பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது. ஆயினும், அரசு தனது தவறான கொள்கைகளினாலும் திறமையற்ற நிர்வாகத்தினாலும் ஆட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.  ஆரம்பத்தில் கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்களில் முடியும் என்று பிரதமர் கூறியது தவறாகி விட்டது.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அது இந்தியாவை விட்டுப் போகாது. கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்திய தொடர் ஊரடங்கினால் வருவாய் இழப்பு மட்டுமே ஏற்பட்டது. அத்துடன் பரிசோதனை மற்றும் பரிசோதனை கருவிகள் இறக்குமதியிலும் அரசு மிகவும் மோசமாக செயல்பட்டது.  தொடர்ந்து  கொரோனா வைரசால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது பொருளாதாரம் மிகவும் நலிந்து உள்ளது. பெரிய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்கும்படி பொருளாதார நிபுணர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர். அரசு அதைக் கவனத்தில் கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.