டெல்லி: ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தகவலை அதன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: எங்களின் ஊழியர்களுக்கு முடிந்த அனைத்தையும் செய்வோம்.

கோவிட் வைரஸ் காரணமாக வெடித்ததால் விமான தொழில், நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் நெருக்கடியின் விளைவாக ஏற்படும் இழப்பை அளவிடுவது மிகவும் கடினம்,

மே 3 ம் தேதி லாக்டவுன் முடிவடையும் என்ற ஊகத்தை தவிர, இந்த விஷயத்தில் இன்னும் எங்களால் எந்த தெளிவுக்கும் வர இயலவில்லை. விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான வழிமுறைகள் என்னவென்று தெரியவில்லை. அதற்காக காத்திருக்கிறோம்.

மே 4ம் தேதி விமான சேவை சாத்தியமா என்பது தெரியவில்லை. மே மாதத்தின் நடுப்பகுதியில் சில சேவைகளை மீண்டும் தொடங்குவோம் என்று நம்புகிறோம். எங்கள் சரக்கு நடவடிக்கைகளில் இருந்து ஓரளவு பணப்புழக்கம் வருகிறது. அதன் மூலம் இந்த மாதத்தில் 100 கோடி முதல் 150 கோடி வரை வரும் என்பது எதிர்பார்ப்பு என்று கூறினார்.