திருச்சி

திருச்சியில் வேளாண்துறை நடத்தும் வேளாண் சங்கமம் விழா குறித்த விவரங்கள்

இன்று திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். வரும் 29ஆம், தேதி வரை இந்த விழா 3 நாட்கள் நடக்கிறது. இன்று முதல்வர் வேளாண் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார்.

இங்கு தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளார்கள். மேலும் இந்த சங்கமம் மூலம் அரசின் அனைத்து திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

இந்த கண்காட்சியில் விவசாயிகள் வாங்கிச்சென்று தங்கள் பண்ணையில் சாகுபடி செய்வதற்கேற்றவாறு, புதிய ரகங்களின் காய்கறி விதைகள், மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளில் ஒட்டு ரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்டக்கலவை உரங்கள், உயிர் உரங்கள், விதைகள் போன்ற இடுபொருட்களும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இது குறித்து,

 ‘இந்த வேளாண் சங்கமம் விழாவில் பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அதிக விளைச்சல் பெற்ற 3 விவசாயிகளுக்கு விருதும், பணப்பரிசையும் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து விவசாயிகளை அழைத்து வருவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வீதம் கலந்து கொள்வார்கள்’

என்று தெரிவித்துள்ளார்.