பெங்களூரு:

பெங்களூரு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நடிகை ஜெயந்தியை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பழம்பெரும் நடிகையாக ஜெயந்தி தமிழ், கன்னடம் உள்பட 500க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர்.

கடந்த வாரம் அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டதால் அருகிலுள்ள சிட்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவர் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின.

இந்நிலையில், மருத்துவர்கள், ஜெயந்தி  அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் அனுமதியுடன் அந்த மருத்துவமனையில் இருந்து  விக்ரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார்.

தற்போது ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை, கர்நாடக திரைப்பட சம்மேளன வர்த்தக தலைவர் சாய் ராவ் கோவிந்த், சிவராஜ் குமார் மற்றும் பல நடிகர், நடிகைகள் மருத்துவமனைக்கு  சென்று நலம் விசாரித்து வந்தனர்.

தற்போது அவரது உடல்நிலை தேறி வருகிறது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை ஜெயந்தியை முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டு அறிந்தார். அப்போது,  ஜெயந்தி  விரைவாக குணம் அடைந்து வீடு திரும்புமாறு அவர் வாழ்த்து தெரிவித்தார்.