குர்கான்: குர்கானில் உள்ள ஷாப்பிங் மால்கள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க 2 மாதங்களுக்கும் மேலாக குர்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த மால்களை வரும் 1ம் தேதி முதல் திறக்க ஹரியானா அரசு அனுமதித்துள்ளது.

சில கட்டுப்பாடுகளுடன் மால்களை மீண்டும் திறப்பது தொடர்பான மாநில அரசின் முடிவை அமல்படுத்துவதாக குர்கான் மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது. அதேசமயம் ஃபரிதாபாத் அதிகாரிகள் திங்களன்று ஒரு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவை எடுக்க உள்ளனர்.

குர்கான் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவற்றைத் தவிர்த்து, ஹரியானா அரசாங்கம் ஜூன் 7 முதல் மாநிலம் முழுவதும் மால்களை மீண்டும் திறக்க அனுமதித்தது. மால்களில் சமூக தூரத்தை உறுதி செய்ய மாநில அரசு பல கட்டுப்பாடுகளை பட்டியலிட்டுள்ளது. உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மால்களில் உள்ள சினிமா அரங்குகள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு மண்டலங்கள் மூடப்படும்.