சென்னை: ஆவடி அருகே  வயதான சித்தமருத்துவர் மனைவியுடன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளனர்.  இதுதொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியில் நேற்று இரவு  சித்த மருத்துவர் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னகுமாரி  வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். சித்த மருத்துவர் சிவன்நாய், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்கள் இருவரும் தனியாக வசித்துவந்த நிலையில், மர்ம நபர்கள்  வீடு புகுந்து  இருவரையும் கழுத்தை அறுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியில் வசித்து வருபவர். ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் சித்தா மருத்துவரான சிவன் நாயர். இவர் வீட்டிலேயே  மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியையாக  பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு  மகள், மகன் என இரண்டு  குழந்தைகள்.   மகன்  அதே பகுதியில்  தனியாக மனைவியுடன் வசித்து வருகிறார். அங்கு சித்த மருத்துவம் பார்த்து வருகிறார்.   அவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வழக்கம்போல  மருத்துவரை பார்க்க சிலர் காலையில் வந்து பார்த்துள்ளனர். அப்போது, வீட்டினுள், மருத்துவர்  சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. . இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுபேட்டை காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். இதையடுத்து,  ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர் அய்மன் ஜமால் தலைமையில் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா என்றும் ,குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான முப்படைகள் மட்டும் இன்றி படை உடை பீரங்கி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படக்கூடிய பகுதியில் கடந்த வாரம் ஒன்றரை கோடி மதிப்புள்ள நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட பரபரப்பு குறைவதற்குள் கணவன் மனைவி வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பகுதியில் போதிய சிசிடிவி கண்காணிப்பு இல்லை, என்றும் காவல்துறையினர்  முறையாக ரோந்து பணியில் போலீசார் ஈடுபடவில்லை என அப்பகுதி வாசிகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

இந்த இரட்டை கொலை சம்மந்தமாக  கொலை நடைபெற்ற இடத்தில் செல்போன் கைப்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில் மகேஷ் என்ற வட மாநில நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவம் பார்க்க வந்து சென்றவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. நகை மற்றும் பணத்திற்காக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.