மும்பை

டில்லியை ஆளும் பாஜக கூட்டத்துக்கு மகாராஷ்டிரா பணியாது என சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தெரிவித்துள்ளது.

தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசை அமைத்துள்ளன. அம்மாநில முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுப் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் பட்னாவிஸ் குறித்தும், மத்திய அரசில் யார் பெயரையும் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்து மக்களவை உறுப்பினர். சஞ்சய் ராவுத் எழுதியுள்ளார்.

அதில் ”சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஒன்றாக மகாராஷ்டிராவில் இணைந்தது, தேசம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

டில்லியில் ஒழுங்கற்ற கும்பல்கள் போல் ஆள்பவர்களுக்கெல்லாம் மகாராஷ்டிரா எப்போதும் பணிந்து செல்லாது.  இவ்வாறு உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு வந்ததில் முக்கியத்துவம் என்னவென்றால், மத்தியில் அதிகார சக்தியாக விளங்கும் மோடி, அமித் ஷாவை தூக்கி எறிந்துவிட்டுத்தான் ஆட்சிக்கு உத்தவ் தாக்கரே வந்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும். முதலில் தேவேந்திர பட்னாவிஸுடன், அஜித் பவார் சேர்ந்து பதவி ஏற்றவுடன் ஏராளமானோர் சரத் பவார் நடத்தும் நாடகம் என்றெல்லாம் சிலர் பேசினார்கள். எனக்கு அவர்கள் பேசியது சிறுபிள்ளைத்தனமாகவும், நகைப்பாகவும் இருக்கிறது.

மகா விகாஸ் அகாதி கூட்டணி மகாராஷ்டிராவில் உருவாகக் காரணமாக இருந்தவரே சரத் பவார்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தேவேந்திர பட்னாவிஸ் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு  சிறுபிள்ளைத்தனமாகப் பேசினார்.  மகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே இருக்காது. சரத் பவாரின் சகாப்தம் முடியப்போகிறது,  இனி பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் அகாதி கட்சிதான் எதிர்க்கட்சியாக இருக்கும் என்றெல்லாம் பேசினார்.

தற்போது மாநிலத்தில் எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராகத் தான் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார்.   தாம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பட்னாவிஸின் பேச்சு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவசரம்தான் பாஜகவை ஆட்சி அமைத்த 80 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் மூழ்கடித்துவிட்டது.

தேவேந்திர பட்னாவிஸின் அதீத நம்பிக்கைக்கு காரணமான, டில்லியில் உள்ள முக்கிய, மூத்த தலைவர்களின் நட்புதான் அவரை அழித்துவிட்டது. கடந்த மாதத்தில் மாநிலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மராத்தியத் திரைப்படம் சின்ஹாசனை நினைவுபடுத்துகின்றன.

)கடந்த 1979-ம் ஆண்டில் மராத்தியத் திரைப்படமான சின்ஹாசன் (சிம்மாசனம்) படம் வெளியானது. அருண் சாது எழுதிய நாவலைத் தழுவி எழுதப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது)

மகாராஷ்டிராவில் 80 மணிநேரம் இருந்த பட்னாவிஸ், அஜித் பவார் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வில்லனாக ஆளுநர் அலுவலகம்தான் இருந்துள்ளது.

ஒருமுறை என்னிடம் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக நடக்கமாட்டேன் என்று தெரிவித்தார். அப்படி இருக்க, தேவேந்திர பட்னாவிஸுக்கும், அஜித் பவாருக்கும் அவர் ஏன் அவசரப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்?  இதில் ஒருவேளை மத்தியில் ஆளும் உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவர்கள் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறதா?

உண்மையில் அஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த நிகழ்வுதான் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும்,காங்கிரஸ் கட்சிகளை நெருக்கமாக வரவழைத்து, கூட்டணியை இன்னும் வலிமைப்படுத்தின.

தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் சரத் பவார் பக்கம் நின்றபோது, அஜித் பவார் பக்கம் இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டு மீண்டும் சரத் பவார் பக்கமே திரும்பியதோடு. அஜித் பவாரும் சரத் பவாருடன் இணைந்துவிட்டார்.

சரத் பவார் மட்டும் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் இந்தக் கூட்டணி உருவாகி இருந்திருக்காது.   உண்மையில் சிவசேனாவுடன் கை கோக்க காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்களும் பின்வாங்கினார்கள். ஆயினும், சோனியா காந்தியிடம் சரத் பவார், எங்கள் தலைவர் பால் தாக்கரேவுக்கும், இந்திரா காந்திக்கும் இருந்த நட்புறவு குறித்து எடுத்துக் கூறினார்.

அவசர நிலைக்குப் பின், இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் வேட்பாளர்களை நிறுத்தியபோது சிவசேனா வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதையும், குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜியையும் சிவசேனா ஆதரித்ததையும் சரத் பவார் விளக்கினார்’’.என சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.