மும்பை

கோவா மாநிலத்தில் பாஜக மற்றும் கூட்டணிக்கட்சிகள் நடவடிக்கை குறித்துசிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவா மாநில முதல்வராக பதவி வகித்த மனோகர் பாரிக்கர் புற்று நோயால் கடந்த 17 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் இறுதி மரியாதைக்காக பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆளுநர் இல்லத்தில் அவரை சந்தித்த காங்கிரசார் ஆட்சி அமைக்க தங்களை அழைக்குமாறு கோரினர். உடனே பாஜக அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியை மனோகர் பாரிக்கர் உடலுக்கு முன்பே தொடங்கியது.

பாஜகவின் கூட்டணி கட்சியான சாம்னா இது குறித்து, “பாஜக ஒரு நான்கு மணி நேரம் அதாவது செவ்வாய் காலை வரை காத்திருந்தால் கோவாவின் துணை முதல்வர்கள் பதவி ஆசையால் காங்கிரசில் இணைந்திருப்பார்கள். அதனால் அவசர அவசரமாக பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர் நள்ளிரவில் கோவா முதல்வராக பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு விழா பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. மனோகர் பாரிக்கர் உடல் எரியூட்டப்பட்ட சில மணிகளுக்குள் இந்த பதவி ஏற்பு நடந்துள்ளது.

தங்கள் அரசை தக்க வைத்துக் கொள்வதற்காக பாஜக சிறு சிறு கட்சிகளான மகாராஷ்டிர கோமாந்தக் கட்சி மற்றும் கோவா முன்னணி கட்சி ஆகியவைகளுக்கு பாஜக துணை முதல்வர் பதவி அளித்துள்ளது. ஒரு 4 மணி நேரம் கூட காத்திருக்காமல் இந்த பதவி ஏற்பு நடந்துள்ளது. அங்கே மனோகர் பாரிக்கர் உடல் எரிந்துக் கொண்டிருந்த வேளையில் பாஜக பதவி ஏற்பு நடத்தி உள்ளது.

பாரிக்கர் உடல் மீது தூவப்பட்ட மலர்கள் வாடவில்லை. அவருடைய அஸ்தி ஆறவில்லை. ஆனால் பாஜகவின் பதவி வெறி வெளிப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன் கோவா முதல்வர் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டு தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடும் முன்பே இங்கு அடுத்த முதல்வர் தேர்வு நடக்க தொடங்கியது. இது மிகவும் அவமானகரமான சம்பவம்” என சாம்னா பத்திரிகையில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.