மும்பை

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை ஆபாச படம் எடுத்து வெளியிட்டதற்காக கைது செய்தது குறித்த தனது மவுனத்தைக் கலைத்துள்ளார்.

பிரபல தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரர் ஆகவும் இருக்கிறார். கட்டுமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வரும் ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் செயலியை நிறுவி அதில் வெப் சீரீஸ்களை தயாரித்து வழங்கி வருகிறார்.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு காவல்துறைக்கு, ஆபாசப் படங்களை உருவாக்கி அதனை மொபைல் செயலியில் பார்க்கும்படி வெளியிடுகிறார்கள் எனப் புகார் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரித்த போது இந்த ஆபாசப் பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் செயலியில் வெளியிடுவதிலும் முக்கிய நபராக ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது.

இதையொட்டி அவர் மீதான குற்றச்சாட்டுக்கு நம்பகமான ஆதாரங்களைத் திரட்டி வந்த காவல்துறை தற்போது அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக இத்தனை நாட்களாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த ஷில்பா ஷெட்டி முதல்முறையாகத் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பர் எழுதிய புத்தகத்தின் சில முக்கிய வரிகளான ’நடந்ததை நினைத்து கோபமோ அல்லது நடக்கப்போவதை நினைத்து பயமோ கொள்ளாதே. ஆனால், நடப்பில் விழிப்புடன் இரு’ என்பதை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்

அத்துடன், ”நம்மைக் காயப்படுத்தியவர்களை நினைத்து கோபம் கொள்வோம்,  இனிவரும் காலங்களில் வாய்ப்புகளை இழந்துவிடுவோம் என்றோ, நோயால் அவதியடைவோம் என்றோ அல்லது அன்புக்குரியவர்களை இழந்துவிடுவோம் என்று நாம் பயந்துகொண்டு இருப்போம்.   அப்படி இருக்கத் தேவையில்லை. நடந்ததை நினைத்துக் கோபப்படவோ, அல்லது  வரும் காலங்களில் ஏற்படப்போகும் கஷ்டங்களை நினைத்து வருந்துவதை விடுத்து, நடப்பில் தெளிவுடன் இருப்போம்.

கடந்த காலங்களிலும் நான் பல சோதனைகளைக் கடந்து வந்துள்ளேன். அதனை எதிர்காலங்களிலும் கடந்து வருவேன். என் நான் வாழ்க்கையை வாழ்வதற்கு எதுவும் எனக்குத் தடையாக இருக்காது” என அவரின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.