மும்பை: நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணியிலிருந்து ஷிகர் தவான் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் விலகியுள்ளனர்.

நியூசிலாந்தில், ஐந்து டி-20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது இந்திய அணி. முதல் டி-20 போட்டி ஆக்லாந்தில் ஜனவரி 24ம் தேதி துவங்குகிறது.

டி-20 தொடரில் ஷிகர் தவான் இடம்பெற்றிருந்தார். ஆனால், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகினார்.

அதேபோன்று, இந்தியாவின் டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இஷாந்த் ஷர்மாவுக்கும் ரஞ்சித் தொடரில் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், இவர் நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்.

இரண்டு முக்கிய வீரர்கள் விலகியுள்ளதால், இந்திய அணி நிர்வாகம் சற்று அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.