புதுடெல்லி: சென்னை அணியின் சில பேட்ஸ்மென்கள், அணியில் தங்களுக்கான இடத்தை அரசு பணியாக நினைத்துக் கொள்கின்றனர் என்று தோனியின் அணியை சாடியுள்ளார் வீரேந்திர சேவாக்.
கொல்கத்தா அணிக்கு எதிராக எளிதில் வெல்ல வேண்டிய போட்டியை, கேதார் ஜாதவ் மற்றும் தோனி போன்றோரின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இழந்தது சென்னை அணி. தற்போது, அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் சேவாக் கூறியுள்ளதாவது, “தாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதைத் தாண்டி, தங்களுக்கான சம்பளம் கிடைத்து விடுகிறது என்பதால், சென்னை அணியின் சில பேட்ஸ்மென்கள், அணியில் தங்களுக்கான இடத்தை ஒரு அரசு வேலையாக நினைத்துக் கொள்கின்றனர்.
168 என்ற இலக்கு கட்டாயம் எட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கேதார் ஜாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் வீணாக்கிய பந்துகளால் பலனில்லாமல் போய்விட்டது” என்றுள்ளார் சேவாக்.