பீகார் மாநிலத்தில் காங்கிரஸ்-ஆர்.ஜே.டி.இடையே சில மாதங்களுக்கு முன்பே கச்சிதமான கூட்டணி முழு வடிவம் பெற்றிருந்தது.தொகுதி பங்கீடு கூட முடிந்தாகி விட்டது.

லாலு சிறையில் உள்ள நிலையில் ,கட்சி பொறுப்பை கவனிக்கும் அவரது இளைய மகன் தேஜஸ்வி-ராகுலுடன் நேரடியாக பேசி சுமுக உடன்பாடு கண்டுள்ளார்.

இந்த நிலையில்- நேற்று ஒரே நாளில் அங்கு மூன்று குழப்பங்கள்

சில இடங்களை பிரிப்பது தொடர்பாக காங்கிரசுக்கும் ஆர்.ஜே.டி.க்கும் பிரச்சினை.டெல்லியிலும், பாட்னாவிலும் இது குறித்து நடந்த பேச்சு வார்த்தைகளில் முடிவு எட்டப்படவில்லை..

அடுத்து சத்ருகன் சின்ஹா விவகாரம் .டெல்லியில் நேற்று ராகுலை சந்தித்த சின்ஹா- அப்போதே காங்கிரசில் சேர்வதாக இருந்தது. தொகுதி  பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் 6 ஆம் தேதி சேர்வதாக சொல்லி விட்டார்-சின்ஹா.

பா.ஜ.க.வில் டிக்கெட் மறுக்கப்பட்டுள்ள சத்ருகன் சின்ஹாவுக்கு –அவர் எற்கனவே  வென்ற பாட்னா சாகிப் தொகுதியில் சீட் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதற்கு கட்சிக்குள் கடும்  எதிர்ப்பு.

நேற்றைக்கு வந்த நடிகருக்கு டிக்கெட் கொடுப்பதா என உள்ளுர் காங்கிரசார் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.தவிர புதிதாக கட்சியில் சேர்ந்த கீர்த்தி ஆசாத்,தாரிக்அன்வர் ஆகியோருக்கு சீட் கொடுப்பதையும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை.

இந்த களேபரங்களுக்கு மத்தியில் நேற்று  மற்றொரு நிகழ்வும் அரங்கேறியது..

லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்- கட்சியின்  மாணவர் தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டார். அவர் கை காட்டிய ஆட்களுக்கு சீட் கொடுக்க- சகோதரர் தேஜஸ்வி மறுத்து விட்டார்.  இந்த கோபத்தில்  மாணவர் தலைவர் பதவிக்கு ‘குட் பை’ சொல்லி விட்டார் பிரதாப்.

மண்டை காய்ந்து போன தேஜஸ்வி நேற்று தனது பிரச்சாரங்களை எல்லாம் ரத்து செய்து விட்டு இல்லத்தில் முடங்கி கொண்டார்.

நிலமை இன்று சீரடையலாம் என தெரிகிறது.

—பாப்பாங்குளம் பாரதி