மும்பை: கடந்த 20 ஆண்டுகளாக பெரும் வளர்ச்சியைக் கண்டுவந்த இந்திய கட்டுமானத் தொழில்துறை தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அரசின் கொள்கைகளால் வேளாண்மையில் நீட்டிக்கு முடியாத மக்கள் நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்து தஞ்சடைந்தது கட்டுமானத் தொழில்துறையில்தான். இதனடிப்படையில், கடந்த 20 ஆண்டுகளில் இத்துறை பெரிய வளர்ச்சியைக் கண்டது.

ஆனால், நரேந்திர மோடியின் புண்ணியத்தால் கடந்த 6 ஆண்டுகளில் இத்துறையிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது இத்துறையில் ஆட்கள் நிறைந்திருக்க, அவர்களுக்கான பணிவாய்ப்புகளில்தான் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த 1990கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் இத்துறையில் பெரிய வளர்சசி இருந்தது என்கிறார்கள் அத்தொழிலில் பல்லாண்டுகளாக ஈடுபட்டுவரும் நபர்கள்.

கட்டுமானத் துறையில் கடந்த 1999-2000 காலகட்டத்தில் 17 மில்லியன் பணியாளர்கள் இருந்த நிலையில், கடந்த 2004-2005 காலகட்டத்தில் 25.6 மில்லியனாகவும், 2011-12 காலகட்டத்தில் 50.3 மில்லியன் என்பதாகவும் அதிகரித்தது.

அதாவது, நாட்டின் தொழிலாளர் வளத்தில் ஒட்டுமொத்தமாக 10.6% ஐ தன்னகத்தேக் கொண்டிருந்தது கட்டுமானத் துறை. அதேசமயம் கடந்த 1983ம் ஆண்டில் இந்த அளவு 3.2% மட்டுமே. வேளாண்மையில் பங்கேற்காத தொழிலாளர்களில் ஐந்தில் ஒருவர் கட்டுமானத் துறையில் பணிபுரிபவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.