டில்லி

கொரோனா தடுப்பூசிக்கு இந்திய நிறுவனங்களில் முதலாவதாக இந்திய அரசிடம் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோரி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.,  உலக அளவில் இரண்டாவதாக இருக்கும் இந்தியாவில் இதுவரை 96.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.4 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   தற்போது முறையான கொரோனா சிகிச்சை கண்டறியப்படாததால் கொரோனா தடுப்பூசிக்கு இங்கு மிகவும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அவசர அனுமதி வழங்கக் கோரி அந்நிறுவனம் இந்திய அரசு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநருக்குக் கோரிக்கை விடுத்தது.  இதுவே இவ்வாறு அனுமதி கோரிய முதல் நிறுவனம் ஆகும்.   அதற்கு ஒரே நாள் கழித்து இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தங்களது இணை தயாரிப்பான கோவிஷீல்ட்  தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி கோரி உள்ளது.

இந்திய நிறுவனங்களில் அனுமதி கோரி உள்ள முதல் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கோவி ஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டதாகும்,   இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனையை சீரம் இன்ஸ்டிடியூட் நாடெங்கு8ம் உள்ள பல பகுதிகளில் நடத்தி உள்ளது.  இந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளின் அடிப்படையில் அனுமதி கோர உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் சென்ற மாதம் அறிவித்தது.

தற்போது கோவிஷீல்ட் மருந்து அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் இதுவரை 4 கோடி டோஸ்கள் தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளதாகவும்  எனவே மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அனுமதி கொடுத்த உடன் பொதுமக்களுக்கு அளிக்கத் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மருந்து ஏற்கனவே பிரிட்டன், பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடந்த சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் கொரோனாவை தடுப்பதில் நல்ல திறன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட ஆர்வலர்களுக்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படாததால் இந்த மருந்து கொரோனாவை தடுப்பதில் பாதுகாப்பானது என சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இந்த மருந்தை நகர்ப்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில் சுலபமாக எடுத்துச் சென்று அளிக்க முடியும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிட்க்ஹ்துள்ளன.  அத்துடன் இந்த மருந்து மற்ற தடுப்பூசிகளைப் போல் 2 முதல் 8 டிகிரி வெப்பத்தில் வைத்தால் போதுமானது என்பது இந்திய நாட்டு மருந்து பாதுகாப்பு முறைகளுக்கு மிகவும்  பொருத்தமானது எனவும் கூறப்படுகிறது.