சென்னை:
சென்னையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.360 கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் தேதி தமிழ்நாடு மின் நுகர்வோர் மற்றும் பகிர்மான கழக அலுவலர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முக்கிய ஆவணங்கள், எலக்ட்ரானிக் ஆவணங்கள், சொத்து பறிமுதல் செய்யப்பட்டன. 2011 முதல் 2016 வரை அரசுக்கு 908 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 360 கோடி மதிப்புடைய சொத்துக்கள் மற்றும் வைப்பு நிதிகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

2011 – 2016 வரை விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டுவந்த வகையில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சோதனையில், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் வசமிருந்து ரூ.360 கோடி நிரந்தர வைப்பு தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அறப்போர் புகாரில் லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த ரூ 908 கோடி நிலக்கரி போக்குவரத்து ஊழலில் அமலாக்கத்துறை தற்பொழுது கையில் எடுத்து ரூ 360 கோடி வைப்பு நிதிகளை முடக்கி உள்ளது குறிப்பிடதக்கது.