காஞ்சிபுரம்,

பொதுமக்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்கக் கோரி குடிமகன்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுக்கா, இளையனார் குப்பம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் தேவையற்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பின்னர் இது போராட்டமாக மாறியது. இதன் காரணமாக அந்த கடைகளை மூடப்பட்டன.

இந்நிலையில், அந்த கடைகளில் ரெகுலராக மது வாங்கி குடித்து வந்த குடிமகன்கள், தற்போது  நீண்ட தூரத்திற்கு சென்று மது வாங்கி வர வேண்டியது இருப்பதால், பண விரயமும், நேரமும் வீணாவதாக கூறுகின்றனர்.

இதையடுத்து, ஏற்கனவே உள்ள இடங்களில் மீண்டும் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.