சென்னை

ன்று முதுமலைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாலை 3.30 மணிக்கு வருகை தருகிறார். அவர், டில்லியில் இருந்து காலை 11.30 மணிக்குத் தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு வந்து அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அருகே மசினகுடியில் உள்ள ஹெலிபேடுக்கு வந்து இறங்குகிறார்.

பிறகு அவர் காரில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குச் செல்கிறார். அவர் அங்கு ஆதிவாசி மக்கள் மற்றும் பாகர்களைச் சந்தித்து வளர்ப்பு யானைகளைப் பார்வையிடுகிறார். ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம் பிடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோரை சந்தித்துவிட்டு மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மசினகுடி ஹெலிபேடு, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், காரில் செல்லும் வழிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  நாளை வரை அனைத்து விடுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளைத் தங்க அனுமதிக்கக்கூடாது என்று விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து 900 காவல்துறையினர்  முதுமலைக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மசினகுடியில் ஹெலிபேடு மற்றும் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.