புதுச்சேரி:

புதுச்சேரியில் உள்ள 1 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 1 சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்றுமுதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை மாவட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 97 தொகுதிகளில் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியும் அடங்கும்.

புதுச்சேரியில் உள்ள 1 பாராளுமன்ற தொகுதியுடன் காலியாக இருந்த தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் துறை பல்வேறு நடைவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும்  மாநிலம் முழுவதும் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் விடுத்துள்ள அறிக்கையில்:-

புதுவை மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாதைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.