ஐதராபாத்: இந்தியா மக்களின் தேவை கருத்தில்கொண்டு, ரஷியாவில் இருந்துஸ் புட்னிக் -வி தடுப்பூசிகளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ஏற்கனவே முதல் தொகுப்பு வந்தடைந்துள்ள நிலையில், இன்று 2வது தொகுப்பாக மேலும், 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் ஐதராபாத் வந்தடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய தயாரிப்புகளான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளதால், ரஷ்யாவில் இருந்து புட்னிக் -வி இறக்குமதி  செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, முதல்கட்டமாக மே மாதம்  1-ந் தேதி ரஷியாவில் இருந்து 1½ லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வந்தடைந்தன. இந்தநிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது தொகுப்பு நேற்று இந்தியாவுக்கு வந்தது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில், 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருந்தன. விமானத்தில் இருந்து தடுப்பூசி பெட்டிகள் இறக்கப்படும் புகைப்படத்தை ஸ்புட்னிக்- வி இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ரூ.948 மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ந் தேதி, ஐதராபாத்தில் முதல் முறையாக ஒரு பயனாளிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.