சிம்லா

காணாமல் போன சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சலப்பிரதேசத்திற்குச் சென்றார். நேற்று இமாச்சலப்பிரதேசத்தின் சட்லஜ் ஆற்றின் அருகே மனப்பாங்கான பகுதியில் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் காரில் சென்றுள்ளார்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகி விபத்தில் கார் ஓட்டுநர் பலியானார். காரில் பயணித்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமி மாயமானார்.  கார் ஆற்றுக்குள் கவிழ்ந்தபோது வெற்றி துரைசாமி ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், படுகாயமடைந்த கோபிநாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான வெற்றி துரைசாமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தற்போது சட்லஜ் நதி, பக்ரா நங்கல் அணையில் வெற்றி துரைசாமியைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கடும் பனிமூட்டத்தால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை வெற்றி துரைசாமி குறித்த தகவல் கிடைக்கவில்லை என்றும் தகவல் அறிய இரண்டு நாட்களாகும் என்றும் இமாச்சலப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.