சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  உயர்நீதிமன்ற மதுரை கிளையும், டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்து உள்ளது. மேலும், இதுதொடர்பாக தமிழகஅரசு முடிவு எடுக்க  உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு  கல்வி நிறுவனங்களை பாதுகாப்பு நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து சில மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,  நவம்பர் 16ந்தேதி முதல் தமிழகத்திலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து பெற்றோர்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையில், அரசின் பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மனுவில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. போக்குவரத்து முழுமையாக இயங்காத நிலையில் மாணவர்கள் வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீது இன்று நடந்த விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  பள்ளிகள்,  கல்லூரிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளதாகவும்,  பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதுபோல பல நாடுகளிலும்  கொரோனாவின் 2-ம் அலை பரவி வருகிறது.

கொரோனா தொற்றால், நீதிபதிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும்  சூழலில் குழந்தைகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டால், அதன்ல் மேலும் சிரமம் ஏற்படும். அதனால், பள்ளிகள், கல்லூரிகளைத்  டிசம்பர் மாதத்துக்கு திறக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது என்று தெரிவித்ததுடன்,  இது தொடர்பாக அரசு சிறந்த முடிவெடுக்கும் என்று நம்புவதாக கூறிய நீதிபதிகள்,  பள்ளிக், கல்லூரிகளை திறப்பதில் பிற மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு நவம்பர் 20ந்தேதிக்கு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.