காபூல்:

ஆப்கானிஸ்தானில் ராணுவம் குண்டுவீசி தாக்கியதில் பள்ளிக்கூட்டம் தரைமட்டமானது இதில் மாணவர்கள் உட்பட 150 பேர் பலியானார்கள்.

ஆப்கானிஸ்தானில் குண்டூஷ் மாகாணத்தில் தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டம் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப் பாட்டில் இருக்கிறது. அதை தங்கள் கட்டுப்பாட்டில்  கொண்டு வர ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று தலிபான் கவுன்சில் அமைப்பின் உறுப்பினர்கள் குவெட்டாவில் இருந்து தஷ்ட்-இ-ஆர்சி பகுதியை பார்வையிட சென்றார்கள். அங்கு தலிபான் தீவிரவாத இயக்க முக்கிய பிரமுகர்கள்  ஒரு மசூதியில் ஒன்றுகூடினர்.  அவர்களை குறி வைத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின.  அதில் குறி தவறி மசூதிக்கு அருகில் உள்ள மத பள்ளி மீது குண்டுகள் விழுந்தன.

அதனால் பள்ளி கட்டிடமும், அதை   மசூதியின் ஒரு பகுதியும் இடிந்தன. குண்டுவீச்சு நடந்தபோது பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்துகொண்டிருந்தது. அதில் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் கலந்து கொண்டனர்.

இந்தத் தாக்குதலில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட  150 பேர் பலியாகினர்.   இந்த தகவலை தலிபான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசு தரப்பில்,  25 தீவிரவாதிகள் மட்டுமே பலியாகினர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் காயம் அடைந்த 50 பேர் குண்டூஷ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதில் இருந்து ஆப்கானிஸ்தான் அரசு அமெரிக்க படைகளின் உதவியுடன் பல குண்டு வீச்சுகளை நடத்தியுள்ளது. ஆனால் நேற்று நடந்த குண்டு வீச்சில் அமெரிக்காவுக்கு தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.