டில்லி
ஆதார் மற்றும் சமூக வலை தளக் கணக்கு இணைப்பு குறித்து அரசிடம் உள்ள திட்டம் குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
முகநூல், வாட்ஸ் அப், போன்ற சமூக வலைதளக் கணக்குகளுடன் ஆதார் உள்ளிட்ட விவரங்கள் அளிக்க வேண்டும் என சென்னை, மும்பை மற்றும் மத்தியப் பிரதேச நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என முகநூல் நிர்வாகம் வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்துள்ளது.
அத்துடன் இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் உயர்நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளைத் தடை செய்ய வேண்டும் எனவும் முகநூல் நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே இந்த வழக்கில் தமிழகம் உள்ளிட்ட பால் மாநிலங்கள் தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்துரைத்துள்ளன.
முகநூலின் மனு உச்சநீதிமன்றத்தில் தீபக் குப்தா மற்றும் அநிருத்தா போஸ் ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அமர்வு, “சமூகவலை தள கணக்குகள் குறித்து மத்திய அரசுக்கு ஏதேனும் கொள்கை முடிவு உள்ளதா? இது குறித்து ஏதேனும் திட்டம் உள்ளதா? இவற்றுக்கு வரும் 24 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.