டில்லி:

தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை ஒரு நாள் தாமதமாக்கினாலும் கூட அதை வாராக் கடன் என்று அறிவித்து 180 நாட்களுக்குள் தீர்க்குமாறு ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையை உச்சநீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை ஒரு நாள் தாமதமாக்கினாலும் கூட அதை வாராக் கடன் என்று அறிவித்து 180 நாட்களுக்குள் தீர்க்குமாறு கூறியிருந்தது. மேலும், ரூ.  2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகைக்கு இந்த நடவடிக்கையை எடுக்குமாறும் கோடிட்டு காட்டியிருந்தது.

ரிசர்வ் வங்கியின் இந்த சுற்றறிக்கை  பெரிய  நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, , ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்யகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய சுற்றறிக்கையை   ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை சட்டத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்து உள்ளது.