டில்லி

நாடெங்கும் உள்ள அனைத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கொரோனோ பரவலின்போது ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கியது.   ஆனால் ஆதார் அட்டை இல்லாததால் பாலியல் தொழிலாளிகளுக்கு அந்த நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை.  இதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘பாலியல் தொழில் கொரோனோ ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால் வருமானம் இன்றி அதுசார்ந்த தொழிலாளர்கள் உணவுக்குக் கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஆகவே இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்,’ எனக் குறிப்பிடப்பட்டது. நீதிமன்றம், இவர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி எல். நாகேசுவர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் போது நீதிபதிகள், ‘ஒரு தொழிலை வைத்து யாரையும் பிரித்துப் பார்க்க முடியாது.  ஒருவர் பாலியல் தொழில் செய்தாலும் அவர்களும் மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமை உள்ளது. அவர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் போது 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும்.  அத்தகையோரிடம் இருப்பிட சான்றிதழ் குறித்துக் கேட்காமல் தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு நிறுவனத்தில் அவர்கள் வகைப்படுத்தப்பட்டு இருந்தாலே, ஆதார் அட்டையை வழங்கலாம்,’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.