டில்லி

த்திய அரசு தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது குறித்துப் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மத்திய அரசு தமிழகத்திற்கும், கர்நாடகத்துக்கும் இடையே நிலவும் காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க காவிரி நதிநீர் ஆணையம் அமைத்துள்ளது.  இந்த ஆணையம்  நதிநீர் பங்கீடு விவகாரத்தை முடிவு செய்து உத்தரவிட்டு வருகிறது. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயன்றது.

தமிழக அரசு இதற்குத் தடை கோரியும், தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  வழக்கை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தபோது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஜி.உமாபதி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகி வழக்கு கடந்து வந்த பாதையைக் குறிப்பிட்டனர்.

நீதிபதிகள், ‘நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விட்டதா?’ எனக் கேட்டனர். மத்திய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வசீம் காத்திரி ‘கர்நாடகாவில் அமைந்துள்ள புதிய அரசு இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும். இது தொடர்பாக மாநில முதல்வர மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக’ பதிலளித்தார்.

நீதிபதிகள், ‘புதிய அரசு, பழைய அரசு பற்றி எல்லாம் பேச வேண்டாம். அதை மறந்து விடுங்கள். உச்சநீதிமன்றம் மே 2-ந் தேதி பிறப்பித்த உத்தரவை வாசியுங்கள்’ எனக் கேட்ட=தற்கு பதில் அளித்த வழக்கறிஞர், தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

நீதிபதிகள் “ ஒரு மாதம்தான் கடந்து விட்டதே, ஆணையம் அமைத்தது தொடர்பான அரசிதழ் அறிவிப்பைத் தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். பிறகு  நீதிபதிகள், தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்கும் விவகாரத்தில் தேவையான பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.