டில்லி

ச்சநீதிமன்றம் ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தத் தடை விதிக்க மறுத்துள்ளது.

வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு நடத்த அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. ஞானவாபி கமிட்டி சார்பில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம் இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகக் கேட்டுக்கொண்டது. மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குத் தடைவிதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  அலகாபாத் உயர்நீதிமன்றம், நீதி நலன் கருதி ஞானவாபி மசூதியில் அறிவியல் பூர்வமான அகழாய்வு நடத்த அவசியம் உள்ளது எனத் தெரிவித்தது,

மேலும் ஞானவாபி மசூதியில் அகழாய்வைத் தொடர்ந்து நடத்த இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் தொல்லியல் துறை ஆய்வுக்குத் தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள், ஞானவாபி மசூதியில் இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஞானவாபி மசூதிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆய்வை மட்டுமே நடத்த வேண்டும் என்றும், அகழாய்வு நடத்தக் கூடாது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆய்வு தொடர்பான அறிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.