டெல்லி: ஆண்டு வருமானம் 8 லட்சம் வரை சம்பாத்தியம் செய்யும்  உயர்ஜாதி ஏழைகளுக்க்கு 10% இட ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையை உச்சநீதி மன்றம் கடுமையாக விமர்சித்ததுடன், சரமாரியாக கேள்விக்கனைகளை வீசியது.

ஆண்டு வருமானம் 8 லட்சம் உள்ளவர்கள் வருமான வரி கட்டுவதற்கு தகுதியானவர்கள் என்ற நிலையில், அவர்கள் ஏழைகள் என்று எப்படி கூற முடியும், அவர்களுக்கு இடஒதுக்கீடு ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு  அறிவித்து உடனே நடைமுறைப்படுத்தியது. அதே வேளையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மண்டல் குழு பரிந்துரைகளின் படி வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப் படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு  அமல்படுத்தாமல் இருந்தது. இதற்கு எதிராக திமுக  சார்பில் உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தது. இதன் பின்னரே மத்திய அரசு ஓபிசியினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க முன்வந்தது.

இந்த நிலையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வான நீதிபதிகள்  சந்திரசூட், விக்ரம்நாத், பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

ஏற்கனவே அக்டோபர் 7-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே, உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அரசு வழக்கறிஞர், அது கொள்கை முடிவு என்று கூறினார். ஆனால், அதை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தனர்.

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு என்ன ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டது?

எந்த ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது.

இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பதை எப்படி வரையறை செய்தீர்கள்?

சினோ கமிட்டி அடிப்படையில்தான் உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு சொல்கிறது. அந்த சினோ கமிட்டி அறிக்கையை இதுவரை  ஏன் தாக்கல் செய்யவில்லை?

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது.  ஆனால், உயர்ஜாதி ஏழைகள் 10 சதவீத ஒதுக்கீட்டிற்கு  உயர்ஜாதி ஏழைகளின் சொத்துகளை கணக்கில் எடுக்காமல், வருமானத்தை மட்டும் எப்படி கணக்கில் எடுக்க முடியும்?

ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் இருப்பது போல, உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் உள்ளதா?

அத்தனை  கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரத்தை வரும் 28-ந் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.