யூடியூபர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது மூன்றாவது தடுப்பு காவல் (Goondas Act) உத்தரவை ரத்து செய்ய கோரி அவரது சகோதரியின் மகன் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அதில் நேரடியாக தலையிட மறுத்தது.

நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அமர்வு, இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது. அங்கு மனு தாக்கல் செய்தால் விரைவாக விசாரிக்கலாம் என்றும் தெரிவித்தது.

இந்த வழக்கின் பின்னணி: கடந்த 2025 டிசம்பர் 13ஆம் தேதி, மிரட்டல் வழக்கில் சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதே நேரத்தில், அரசாங்கம் அவரை குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறது என்றும் நீதிமன்றம் விமர்சித்தது.

பின்னர் மேல் முறையீட்டில், சங்கரின் ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை. ஆனால் சில கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. வழக்குடன் தொடர்புடைய கருத்துக்கள் வெளியிடக் கூடாது, சாட்சிகள் அல்லது இணை குற்றவாளிகளை தொடர்பு கொள்ளக்கூடாது, மருத்துவம் அல்லது வழக்கு தொடர்பான காரணங்களைத் தவிர வெளியே செல்லக்கூடாது என நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த நிபந்தனைகளை தளர்த்த கோரி சங்கர் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோதும், அவர் ஜாமீனில் இருந்தபோது வீடியோக்கள் வெளியிட்டதை குறிப்பிட்டு நீதிமன்றம் தலையிட மறுத்தது.

இந்நிலையில், மார்ச் 25ஆம் தேதி சரணடைய வேண்டிய நிலையில் இருந்த சங்கருக்கு எதிராக அதே நாளில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் 8ஆம் தேதி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 9ஆம் தேதி, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தடுப்பு காவல் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், சங்கர் முன்பும் இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் அதை ரத்து செய்துள்ளது என்றும் கூறப்பட்டது.

மேலும், அரசாங்கத்தின் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களை வெளிப்படுத்தியதற்காகவே சங்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், வழக்கின் அடிப்படையான FIR நகல் கூட சங்கருக்கு வழங்கப்படவில்லை என்றும், அவரது செயல்கள் பொதுஅமைதியைப் பாதித்ததாக தெளிவான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் மனுதாரர் வாதிட்டார்.

ஆனால், இந்த மனுவை நேரடியாக விசாரிக்காமல், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]