ரியாத்: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, தடை செய்யப்பட்ட ஹஜ் யாத்திரை 7 மாதங்களுக்குப் பின் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,  இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவில் நவம்பர் 1ந்தேதி முதல் வெளிநாட்டு யாத்திரீகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 10ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களின் புனித இடமாக கருதப்படும், சவூதியில் உள்ள மெக்கா மசூதிக்கு  ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 25 லட்சம் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக,  இந்தாண்டு  வெளிநாட்டு ஹஜ் யாத்ரீகர்கள் சவூதி வர அனுமதி மறுக்கப்பட்டது.  இந்தியாவிலும் ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல கொடுத்த அனுமதியும் ரத்துசெய்யப்பட்டது.  ஆனால், தற்போது தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில்,  கடந்த ஏழு மாதங்களாக  நீட்டிக்கபட்டிருந்த தடை இப்போது விலக்கப்பட்டு உள்ளது.  யாத்ரீகர்களை புனித பயணத்திற்கு அனுமதிக்க சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே, முதற்கட்டமாக வரும் அக்டோபர் 4ம் தேதி முதல், ஐக்கிய அரபு அமிரகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு,  நாள் ஒன்றுக்கு   6 ஆயிரம் பேர்கள் மெக்கா வந்துசெல்கின்றனர்.  நவம்பர் 1 ம் தேதி முதல் குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மெக்கா செல்லும் பயணிகள் அந்நாட்டு அமைச்சகம்  உருவாக்கி உள்ள செயலிமூலம்,  பதிவு செய்து, அனுமதி பெற வேண்டும், மேலும், அரசு அறிவுறுத்தி வரும்  சுகாதார வழிகாட்டு தல்களையும் அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறி உள்ளது.

அதன்படி, முதல் நாளில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10ஆயிரம் பேர்  உம்ரா யாத்திரைக்கு   அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக ஹஜ்யாத்திரைக்க மெக்காவுக்கு செல்லும் முன், வெளிநாட்டைச் சேர்ந்த யாத்ரிகர்கள்  3 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.