மெக்கா
ஹஜ் யாத்திரைக்கு வரப்போகும் சுமார் 20 லட்சம் யாத்திரிகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர சவுதி அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை எனப்படுவது. தங்கள் ஆயுளில் ஒரு முறையாவது மெக்கா செல்ல வேண்டும் என்பதே ஒவ்வொரு இஸ்லாமியரின் லட்சியமாகும். நமது இந்தியாவில் மெக்கா சென்று வர அரசு உதவித் தொகை அளிப்பது குறிப்பிடத்தக்கது. 1941 ஆம் வருடம் சுமார் 24000 பேர் வருகை தந்த மெக்காவில், சென்ற வருடம் 13,25,000 பேர் வந்தது குறிப்பிடத் தக்கது.
இந்த வருடம் இதுவரை மெக்கா வர சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது தவிர உள் நாட்டிலிருந்தும் ஒவ்வொரு வருடமும் சுமார் 5 லட்சம் பேர் வரை மெக்காவுக்கு யாத்திரை செல்வது வழக்கம். எனவே அனைத்து யாத்திரிகர்களுக்கும் தேவையான வசதிகளை சவுதி அரசு செய்து தரும் வேலைகளில் இறங்கி உள்ளது.
கூடார நகரம் என அழைக்கப்படும் மினா நகரத்தில் பல கூடாரங்கள் ஏ சி வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனித்தனி இடங்களில் தங்க வசதி செய்யப்பட உள்ளது. மொத்தம் 80 நாடுகளில் இருந்து யாத்திரிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல் பணிக்காக சுமார் 17000 ராணுவத்தினர் அமர்த்தப் பட உள்ளனர்.