புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத் தலைமைச் செயலராக சரத் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின். பேச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என்று புகார் கூறப்பட்டு வருகிறது.  மேலும் அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டுத் திருப்பி அனுப்புவதாகக் குற்றஞ்சாட்டப்படுவதால் அதிகாரிகள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சபாநாயகர் செல்வம் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். அண்மையில் நிதித்துறை செயலாளரும், தலைமைத் தேர்தல் அதிகாரியுமான ஜவகர் தலைமைத் தேர்தல் அதிகாரி தவிர அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். தலைமைச் செயலாளர் ராஜீவ்வர்மா, நிதித்துறை மந்திரியும், முதல்வருமான ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவும் தன்னை இடமாற்றம் செய்யும் படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்குக் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்பட்டது.

தற்போது புதுச்சேரி தலைமை செயலராக சரத் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருணாசலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலராகப் பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.