சென்னை: மேற்குவங்க மாநில முதல்வரான மம்தாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் பலாத்காரம் வழக்கின் முக்கிய குற்றவாளயின திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தலைமறைவு  ஷேக் ஷாஜகான்  அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டுஉள்ளார்.

நாட்டையே உலுக்கிய சந்தேஷ்காலி பெண்கள் பாலியல்  வன்புணர்வு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான  வழக்கில்  கடந்த 55 நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் இன்று (பிப்ரவரி 29) கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சுந்தர்பன் டெல்டாவில் உள்ள சிறிய கிராமம் தான் சந்தேஷ்காலி. சந்தேஷ்காலி கிராமத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷேக் ஷாஜகான் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கிராமத்தில்,  அரசியல் கட்சிகள் முகாமிட்டு உள்ளதுடன், ஊடகங்களும் முகாமிட்டு உள்ளன. இங்கிருந்து தினசரி வரும் தகவல்கள் பததைக்க வைக்கும் விதமாக உள்ளது.

பெண் முதல்வராக ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தில், பல பெண்கள் அவரது கட்சியினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு வந்துள்ளது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், முக்கிய குற்றவாளயிக கருதப்படும், மம்தா கட்சியைச் சேர்ந்த தலைவரான  ஷேக் ஷாஜகான் என்பவர்  தலைமறைவானார்.

அவரை கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளும்,  கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதைத்தொடர்ந்து, கடந்த  ஜனவரி 5ந்தேதி அன்று, ஷேக் ஷாஜகான் வீட்டில் அமலாக்க இயக்குனரகக் குழு சோதனை நடத்தச் சென்றது. அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று அதிகாரிகள் காயமடைந்தனர்.. அன்றைய தினம் ஷாஜகான் தலைமறைவானார்.

இதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், மேற்குவங்க அரசுமீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இதற்கிடையில், கடந்த  பிப்ரவரி 8ந்தேதி அன்று,  சில உள்ளூர் பெண்கள் துடைப்பம் மற்றும் கம்புகளை ஏந்தியபடி சந்தேஷ்காலியின் பிரதான சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்களான ஷிபா பிரசாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, அடுத்த நாளான  பிப்ரவரி 9ந்தேதி  போராட்டத்தில் ஈடுபட்ட  பெண்கள்,  ஷேக் ஷாஜகான் நண்பர், ஹிபா பிரசாத் ஹஸ்ராவின் வீடு அவருக்கு சொந்தமான இடங்களை தாக்கினர். அவரது கோழிப்பண்ணைக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு மற்றும் பதற்றம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 10 ந்தேதி பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மற்றொரு குற்றவாளயின  உத்தம் சர்தார் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  பிப்ரவரி 12ந்தேதி பேசிய  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “சந்தேஷ்காலியில் இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்” என்று தெரிவித்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,  பிப்ரவரி 13ந்தேதி,  ஐபிஎஸ் அதிகாரி சோம தாஸ் மித்ரா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு பெண் போலீஸ் குழு கிராமத்திற்குச்  விசாரணை நடத்த சென்றது.

அதுபோல,  பிப்ரவரி 14ந்தேதி மாநில பாஜக குழுவினரும் சந்தேஷ்காலிக்கு  செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை அங்கே செல்ல விடாமல் மம்தா அரசின் காவல்துறை தடுத்து, தடியடி நடத்தி விரட்டியது. இதில், தான் காயமடைந்ததா பாஜக எம்பி சுகந்தா மஜும்தார் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக,  மேற்கு வங்காளத்தின் மூத்த அதிகாரிகளுக்கு லோக்சபா சிறப்புரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதன்பிறகே, அதாவது, பிப்ரவரி 17ந்தேதி  ஹஸ்ரா மற்றும் சர்தார் மீது காவல்துறை கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை சேர்த்தது. அதன்பேரில்,  பிப்ரவரி 18ந்தேதி முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஷிபா பிரசாத் ஹஸ்ரா கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த கொல்கத்தா உயர்நீதிமன்றம்,  சந்தேஷ்காலியில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை,  ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நினைவூட்டுவதாகவும்,  தலைமறைவாக உள்ள ஷேக் ஷாஜகானை உடனே  சரணடைய சொல்ல வேண்டும் என்று  மேற்குவங்க அரசுக்கு அறிவுறுத்தியதுடன் மம்தா அரசையும், காவல்துறையினரின் நடவடிக்கைகளையும் கடுமையாக சாடியது.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த (பிப்ரவரி 21ந்தேதி, மேற்குவங்க மாநில டிஜிபி ராஜீவ் குமார், சந்தேஷ்காலியில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் புகார்களையும் காவல்துறையினர் கேட்பார்கள் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன்பிறகே காவல்துறை நடவடிக்கை தொடங்கியது.

காவல்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து,  பிப்ரவரி 22ந்தேதி,  ஷாஜகான் கும்பலால் கையகப்படுத்தப்பட்ட சிறுவர் பூங்காவை சந்தேஷ்காலி மக்கள் விடுவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அடுத்த நாளான,  பிப்ரவரி 23ந்தேதி சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணாமுல் தலைவர்களின் சொத்துக்களுக்கு உள்ளூர்வாசிகள் தீ வைத்ததால் புதிய போராட்டங்கள் வெடித்தன. இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து,  பிப்ரவரி 24ந்தேதி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  மாநில அமைச்சர்கள் அடங்கிய  குழுவை சந்தேஷ்காலி கிராமத்திற்கு அனுப்பி பேச அறிவுறுத்தினார். அந்த குழுவினரும்   கிராமத்திற்குச் சென்று மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியளித்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சந்தேஷ்காலி புகார்கள் தொடர்பாக,  ஷாஜஹான் ஷேக்கை கட்சி பாதுகாக்கவில்லை என்று  பிப்ரவரி 25ந்தேதி  கூறினார்.  மேலும், ஷேக் மீதான விசாரணைக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 26ந்தேதி இந்த வழக்கின் விசாரணையின்போது,  ஷேக் ஷாஜகான் காவல்துறையினர் உடடினயாக  கைது செய்ய வேண்டும் என்று  அதிரடியாக கல்கத்தா உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டதுடன், அவரை கைது செய்ய நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியது.

மேலும், பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி  கிராமத்திற்கு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த விவகாரதில் மேற்குவங்க அரசுக்கு   நீதிமன்றமும் கடும் கண்டனங்களை தெரிவித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,,  ஷாஜகானை கைது செய்ய தவறினால் 72 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தா பிப்ரவரி 27ந்தேதி  மாநில அரசுக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு பிறகே பிப்ரவரி 28ந்தேதி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தில் வாயை திறந்தார்.   பழங்குடியினருக்கு சொந்தமான நிலம் எந்த நிலையிலும் பறிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிப்பதாக கூறினார்.

இந்த நிலையில், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், கடந்த  55 நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் இன்று (பிப்ரவரி 29) கைது செய்யப்பட்டார்