புதுச்சேரி:
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் உள்ள  எம்ஜிஆர்  சிலைக்கு மர்ம நபர் யாரோ காவித்துண்டு அணிவித்திருந்தது தெரிய வந்தது. இதனால், புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இது தொடர்பாக,  தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். எம்ஜிஆர் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்திய விஷமிகள் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று புதுச்சேரி முதல்வருக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்றும் காவித்துண்டு அணிவித்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டு இருப்பதாகவும்,  யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.