பெங்களூரு: எதிர்காலத்தில் செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி ஏற்றப்படும் என கர்நாடக பாஜக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநில பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம்  சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளது. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை நிர்வாகம் அனுமதிக்க மறுத்த நிலையில், அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு போட்டியாக பல மாணவ மாணவியர் காவி அடையாளத்துடன் கல்வி நிலையங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி யது. இதன் அடுத்தக்கட்டமாக, சிவமோகா அரசு கல்லூரியில் தேசியக்கொடிக்கான கொடிக்கம்பத்தில் காவிக்கொடி  ஏற்றப்பட்டது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்  அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மேலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளார்.

“பல நூற்றாண்டுகளுக்கு முன் ராமனும் மாருதியும் காவிக்கொடியை தங்கள் தேர்களில் ஏற்றிவைத்தார்கள் அல்லவா? எதிர்காலத்திலும் இது சாத்தியம், யாருக்குத் தெரியும்? முன்பு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொன்னபோது மக்கள் நம்மைப் பார்த்து சிரிக்கவில்லையா? புகலிடம்’ இன்று நாம் அதை அடைந்துவிட்டோமே?”

இப்போது அரசியலமைப்பு சட்டப்படி நமது தேசியக்கொடியாக மூவர்ணக்கொடி அமைந்துள்ளது. அதனை மதிப்பதும், மரியாதை செலுத்துவதும் இந்தியர்களின் கடமை. இதில் கேள்வி எதுவும் எழுப்புவதற்கில்லை.

இந்து தர்மம் தழைக்க,  இன்றோ நாளையோ இந்தியா இந்து நாடாக மாறும். செங்கோட்டையில் கூட..காவிக்கொடி இந்தியாவின் தேசியக் கொடியாகியே தீரும்” என்றவர், தற்போது மூவர்ணக் கொடியே தேசியக் கொடி என்றும், அதை மதிக்காத எவரும் துரோகி என்றும் கூறினார்.

பின்னர் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தவர், “தேசியக்கொடிக்கான கம்பத்தில் தேசியக்கொடி இல்லாத போதுதான் அதில் காவிக்கொடியை ஏற்றி இருக்கிறார்கள். தேசியக்கொடியை கீழிறக்கி விட்டு, காவிக்கொடியை ஏற்றவில்லை. காங்கிரஸ் கட்சியின் சிவக்குமார் பொய் சொல்கிறார்.

காங்கிரஸ் கட்சிதான் இந்து – முஸ்லிம்கள் இடையே பிரிவினையை திட்டமிட்டு வளர்க்கிறது என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார்.