திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை  அதிகரிக்க கேரளா ஒப்புதல் அளித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோயில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள் திறக்கப்படும். அப்போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து செல்வர்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சபரிமலைக்கு தினசரி 1,000 பக்தா்களுக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தா்களுக்கும் மட்டுமே வழிபாடு செய்ய அனுமதி தரப்பட்டு இருந்தது.

இந் நிலையில், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து, தினசரி 2,000 பக்தர்களுக்கும், சனி, ஞாயிறுகளில் 4,000 பக்தர்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தேவசம் போர்டு பரிந்துரை அளித்தது.

அதை ஏற்று, கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மேலும், டிசம்பர் 2ம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்து தரிசனத்திற்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.