திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வைகாசி மாத பூஜைக்காக  வரும்   14-ந்தேதி மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து விசேஷ நாட்கள் மற்றும் மண்டல பூசை, மகர விளக்கு பூஜை காலங்களிலும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனுக்கு அனுமதி வழங்கப்படும்.

அதன்படி, வைகாசி மாத பிறப்பையொட்டி, வரும் 14ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,   அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.  இதனைத்தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடைதிறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

தொடர்ந்து, 15-ந் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை நடை பெறுகிறது.

15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.