மாஸ்கோ

ப்பிள் தயாரிப்பான ஐபோன் மற்றும் ஐபேடுகளை அரசுப் பணிகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்த ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தனது படைகளை அனுப்பித் தாக்குதலைத் தொடங்கியது. இந்த ஆக்கிரமிப்பை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. ஆயினும் வேறு நாடுகளிலிருந்து ரஷ்யாவிற்கு ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடு சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

ரஷ்ய மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மூலம் நாட்டிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷ்யாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. குற்றம் சாட்டியிருந்தது. ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு முகமையும் இணைந்து செயல்படுவதாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது.

தற்போது ரஷ்ய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில்,

“ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசு அதிகாரிகள் இனி பயன்படுத்தப்பட கூடாது.

பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தைச் செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்தக் கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐபோன்களைப் பயன்படுத்தலாம்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது.