கொல்கத்தா
மேற்கு வங்க பாஜக வின் கட்சி உறுப்பினர்கள் இணைப்பை ஆர் எஸ் எஸ் உறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் சட்டப்பேரவை உறுப்பினர் மனிருல் இஸ்லாம் என்பவர் திருணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் மீது ஏராளமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் சமீபத்தில் திருணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இது அம்மாவட்ட பாஜக தலைவர்களையும் ஆர் எஸ் எஸ் தலைவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
இதையொட்டி ஆர் எஸ் எஸ் தலைவர் கைலாஷ் விஜய்வார்கியா தனது புகாரை மேற்கு வங்க பாஜக பொறுப்பாளருக்கும் கட்சி தலைவர் அமித் ஷாவுக்கும் அனுப்பி வைத்தார். அத்துடன் ஆர் எஸ் எஸ் பத்திரிகையான ஸ்வஸ்திகா தனது தலையங்கத்தில், ”பாஜக தனது எதிரியான திருணாமுல் காங்கிரசை அழிக்க தகுதியற்றவர்களை கட்சியில் இணைத்து வருகிறது. அவ்வாறு இணைபவர்கள் எல்லோரும் மூழ்கிய கப்பலில் இருந்து தப்பித்து வரும் எலிகள்” என குறிப்பிட்டது.
மற்றொரு தலையங்கத்தில் ஸ்வஸ்திகா, “முனிருல் இஸ்லாம் என்பவர் பச்சோந்தியை போல் அடிக்கடி கொள்கை மாறுபவர். அவரை போன்றோரை சேர்ப்பது கட்சிக்கு எவ்வாறு நன்மை அளிக்கும்? ஏற்கனவே திருணாமுல் காங்கிரஸ் கட்சியை அழித்தவரை மாநில பாஜக தலைவர் முகுல் ராய் பரிந்துரை செய்து கட்சியில் இணைத்துள்ளார். முனிருல் இஸ்லாமுக்கு பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. “ என தெரிவித்துள்ளார்.
இதை ஒட்டி இனி மேற்கு வங்க பாஜகவில் உறுப்பினர் இணைக்கும் பணியை ஆர் எஸ் எஸ் உறுதி செய்யும் என தகவல்கள் தெரிவித்துள்ளன. அதன்படி மூத்த தலைவர்கள் தவிர மற்ற தலைவர்கள் பாஜகவுக்கு இணைய விரும்பினால் பாஜக மண்டல அமைப்பு முடிவு செய்ய உள்ளது. ஒவ்வொரு மண்டல அமைப்பிலும் 10 முதல் 15 வார்டுகள் இணைக்கபட்டு அந்த மண்டலத்தில் பாஜகவுடன் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களும் சேர்க்கப்பட உள்ளனர்.