சென்னை: கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இது 100 நாள் வேலைத் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் 75% நிதியும், மாநில அரசு சார்பில் 25% நிதியும் ஒதுக்கப்படுகிறது.

இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாநிலங்கள் பயன்படுத்திய நிதி குறித்த புள்ளி விவரங்கள் நாடாளுமன்ற மக்களவையில்  வெளியிடப்பட்டது. அதில்  மார்ச் 24-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும்  கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்  ரூ.28,150 கோடி செலவில் சுமார்   82.85 லட்சம் பணிகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதிகபட்சமாக தமிழகத்தில்  ரூ.5,413 கோடி செலவில் 4.67 லட்சம் பணிகள் செய்யப்பட்டுள்ளது.  அதையடுத்து  ரூ.2,806 கோடி செலவில்  மத்தியபிரதேசம் 6.61 லட்சம் பணிகளை  செய்து முடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகஅரசு100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருக்கிறது.