சென்னை: முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக, திமுக அரசு,  லஞ்ச ஒழிப்புத்துறை  புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுமீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கியதில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக திமுக, அறப்போர் இயக்கம் உள்பட பல கட்சிகள்   புகார் தெரிவித்திருந்ததன். அதன் அடிப்படையில்,  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, 2018 அக்டோபரில் அளித்த தீர்ப்பில், “முதல்வராகப் பதவி வகிக்கும் பழனிசாமி மீதான இந்தக் குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்தப் புகார் குறித்து சி.பி.ஐ விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவுசெய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்தது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருப்பதாகவும், அதனால் அவர்களே விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இந்தப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், அதனடிப்படையில் அதன் ஆணையர் விசாரணையை தொடர்வது குறித்து முடிவெடுப்பார் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் முஹம்மது ஜின்னா தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின்மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்காத வகையில், தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கமறுத்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாகப் புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், பழனிசாமி மீதான லஞ்சப் புகார்மீது மீண்டும் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.  இதுதொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு திமுக தொடர்ந்த வழக்கின் விவரம்: தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் 2018-ல் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை, தமிழக முதல்வர் பழனிசாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக, ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் நான்குவழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தப் பணிக்கான ஒப்பந்தம், முதல்வரின் உறவினர் ராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் நான்குவழிச் சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்த ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்ட் கோ’ என்ற நிறுவனத் துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சேகர் ரெட்டி, நாகராஜன், பி.சுப்பிரமணியம் பங்குதாரர்களாக இருக்கின்றனர். இந்த நிறுவனத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மூலம், ரூ.200 கோடி மதிப்பில், மதுரை ரிங் ரோடு பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. வண்டலூர் – வாலாஜா சாலை வரையுள்ள நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக மாற்ற ரூ.200 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம், `எஸ்.பி.கே அண்ட் கோ’ என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களின்கீழ் வரும் சாலைகளில், கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்ட் கோ’ நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட சுமார் ரூ.4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள், பழனிசாமியின் உறவினர் பி.சுப்பிரமணியம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டு, பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இதன்மூலம், முதல்வராகப் பதவி வகிக்கும் பழனிசாமி, தனது கட்டுப்பாட்டில் இருந்த நெடுஞ்சாலைத்துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஆதாயம் அடைந்திருக்கிறார்.

பொதுஊழியர் என்ற முறையில், 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழுள்ள அனைத்து உட்பிரிவுகளின்படி அவர் தண்டனைக்குள்ளாகும் குற்றம் புரிந்திருக்கிறார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தத் துறையும் அவரிடமே இருந்தது. எனவே, இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.