காட்மண்டு

நேபாள நாட்டின் புகழ் பெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோவில் நமது அண்டை நாடான நேபாளத்தில் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குத் தினமும் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே இந்த கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆயினும் தடையை மீறி  இக்கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வ மிகுதியில் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  ஆகவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் இனிமேல் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தற்போது  நேபாள நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல டீஜ் பண்டிகை இன்று தொடங்கி உள்ளது.  இத்தகைய சூழலில்  கோவில் நிர்வாகம் இது போல உத்தரவிட்டுள்ளது.