டில்லி,

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாச்சார திருவிழா நிகழ்ச்சியால் யமுனை நதிக்கரை பாழாகிவிட்டதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட பேரழிவை சரிசெய்யவே பத்தாண்டுகள் ஆகும் என்றும், சுமார் 14 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு யமுனை  ஆற்றின் கரையோரம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் மூன்று நாள் உலக கலாச்சாரத் திருவிழா நடத்தப்பட்டது.   அந்த நிகழ்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக  கூறி அதை தடை செய்ய வேண்டும் என  இயற்கை ஆர்வலர்கள் பசுமைத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டனர். ஆனால்  பசுமைத் தீர்ப்பாயத்தால் தடைசெய்ய முடியாத நிலை இருந்தது.

இருப்பினும் யமுனைக்கரையில் இந்த நிகழ்ச்சியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து விசாரணை நடத்த 4  பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.

அந்தக்குழு, சேதமடைந்த யமுனைக் கரையை மறுசீரமைக்க வாழும் கலை அமைப்பு ரூ.100-120 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது.

மேலும் இந்தக் குழுவின்  47 பக்க விசாரணை அறிக்கையில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின்  மூன்றுநாள் நிகழ்ச்சியில் யமுனைக் கரையில் இருந்த புதர்கள், நாணல்கள், மரம், செடிகொடிகள், நீர்நிலைத் தாவரங்கள் அழிக்கப்பட்டதால்  அங்கிருந்த உயரினங்களும் அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.