சென்னை:

சென்னை அடையாரில், அடையாறு நதிக் கரையோரம் செயல்பட்டு வந்த தனியார் கல்லூரி ஒன்று, அந்த பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான நிலத்தை மடக்கி வைத்துக்கொண்டு, அதை அரசிடம் திருப்பி ஒப்படைக்காமல், மாணவர்கள் மூலம் போராட்டங்களை நடத்தி தொடர்ந்து வைத்து வந்தது.

இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகாலம் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அனைத்து நீதிமன்றங்களும், அரசு நிலத்தை பறிமுதல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நிலையில், தனியார் கல்லூரி யிடம் இருந்து ரூ.1,000 கோடி மதிப்புள்ள 5.20 ஏக்கர் இடம், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது.

அடையாறு மண்டலம், 175வது வார்டு, கோட்டூர்புரம், கெனால் பேங்க் சாலையில், ‘செயின்ட் பேட்ரிக்’ கல்வி நிறுவனம் உள்ளது. இங்கு, மேல்நிலைப் பள்ளி, கலைக்கல்லுாரி ஆகியவை உள்ளன.

இந்த கல்வி நிறுவனமானது, தனது இடத்தையொட்டி இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான, 19.66 ஏக்கர் நிலத்தில், சுமார்  5.20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உபயோகப்படுத்தி வந்தது. இதன் சந்தை மதிப்பு, 1,000 கோடி ரூபாய்.

இது தொடர்பாக பல ஆண்டுகாலமாக நீதிமன்றத்தில் வழங்கு நடைபெற்று வந்த நிலையில், அவ்வப்போது தடை உத்தரவு பெற்று நிலத்தை உபயோகப்படுத்தி வந்தது. இந்த நிலையில், கடந்த  ஜூலை 15ந்தேதி சென்னை  உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவையடுத்து, 5.20 ஏக்கர் இடத்தை மீட்க, மாநகராட்சி, சமீபத்தில், கல்வி நிறுவனத்திற்கு, ‘நோட்டீஸ்’ வழங்கியது. அதற்கான கெடுவும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் நிலத்தை அரசு கையப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தனது  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளைக்கொண்டு போராட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கல்லூரிக்கு அளிக்கப்பட்ட காலவகாசம், 7ம் தேதியுடன் முடிவடைநத் நிலையில், நேற்று போலீஸ் பாதுகாப்புடன், அடையாறு மண்டல, மாநகராட்சி உதவி ஆணையர், தமிழ்செல்வன், செயற்பொறியாளர் வரதராஜன், உதவி செயற்பொறியாளர், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், இடத்தை மீட்கச் சென்றனர்.

அப்போது, நிர்வாகம், தங்கள் கல்வி நிறுவனத்தில் பயிலும், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவ – மாணவியரை, சாலை மறியல் செய்ய வைத்து, இடத்தை மீட்காத வகையில், பிரச்சினை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  மாநகராட்சி ஆணையர், பிரகாஷ், அடையாறு போலீஸ் துணை ஆணையர், பகலவன் உள்ளிட்டோர், கல்வி நிறுவனத்திடம், பல கட்ட பேச்சு நடத்தியதை தொடர்ந்து, அன்று நேற்று மாலை  4:30 மணிக்கு, 5.20 ஏக்கர் இடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். உடனே, பெயர் பலகையும் வைக்கப்பட்டது.