சண்டிகர்:

தீபிகா படுகோனே, பன்சாலி தலையை எடுப்பவர்களுக்கு ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என பாஜக தலைவர் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும் அவரது தலையையோ அல்லது படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் எனவும் போராட்டக்காரர்கள் அறிவித்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

படத்தின் நாயகி தீபிகாவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு படத்தின் வெளியீடு தேதியை தயாரிப்பு நிறுவனமும் ஒத்திவைத்தது. இந்நிலையில் ஹரியானா மாநில பாஜக தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு பேசுகையில், ‘‘தீபிகா மற்றும் பன்சாலியின் தலைக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவித்த மீரட் இளைஞருக்கு பாராட்டுக்கள். அவர்களுடைய தலையை எடுப்பவருக்கு நாங்கள் ரூ. 10 கோடி பரிசு வழங்குவோம். அவருடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்தி கொடுப்போம்’’ என்றார்.

மேலும் அவசியம் ஏற்பட்டால் பாஜக.வில் இருந்து விலகுவேன் என சுராஜ் பால் அமு தெரிவித்துள்ளார். பத்மாவதி படம் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த மிரட்டல் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.