திருப்பதி

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்குத் தரிசனம் செய்ய நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாகும்.  தற்போது கொரோனா கட்டுப்பாடு இருந்த போதிலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருவது வழக்கமாகும்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி, “திருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்கு 7 ஆயிரத்து 500 அறைகள் உள்ளன. இதில் 1,300 அறைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே பக்தர்கள் திருப்பதியில்  நேரில் சென்று அறைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆலய வரவேற்பு மையம் 1-க்கு உட்பட்ட மங்கலம் பாய் காட்டேஜில் (எம்.பி.சி) உள்ள அறைகளின் எண்ணிக்கை-683 ஆகும். இங்கு 167 அறைகள் பழுது பார்க்கப்படுகிறது. எனவே தற்போது 516 அறைகள் பக்தர்களுக்கு வழங்கப்படும்.   தவிர வரவேற்பு மையம் 2 மற்றும் 3-க்கு உட்பட்ட பத்மாவதி விருந்தினர் மாளிகையில் உள்ள 670 அறைகளில்183 பழுது பார்க்கப்படுவதால் 487 அறைகள் வழங்கப்படுகிறது.

இவற்றைத் தவிர 6 ஆயிரத்து 285 அறைகள் உள்ளன. அதில் தற்போது 4 ஆயிரத்து 814 பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதி உள்ள 1,260 அறைகள் பழுது பார்க்கப்படுகிறது.  ஜனவரி 11 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் தங்கும் அறைகளின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு, நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும் ஜனவரி மாதம் 11-தேதியில் இருந்து 14-ந்தேதி வரை காணிக்கையானார்களுக்கு அறைகள் ஒதுக்கீடு சலுகை இருக்காது.

வி.ஐ.பி. பக்தர்களுக்கு வெங்கடகலா நிலையம், ராமராஜ நிலையம், சீதா நிலையம், சன்னிதானம் மற்றும் கோவிந்தசாய் ஆகிய ஓய்வு இல்லங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு சாமி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் வழங்கப்படும். மற்ற பக்தர்களுக்கு அறைகள் வழங்க 6 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.