டில்லி

ரிச்ர்வ் வங்கி ரூ. 8470 கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுக்கள் திரும்ப வரவில்லை என அறிவித்துள்ளது. 

பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8 ஆம்  தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால் ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி புதியதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

கடந்த 2023-ம் ஆண்டு மே 19 ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும்   ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2023 மே 19-ந்தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட தினத்தில் வணிகம் முடிவடையும்போது மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதாவது 2024 பிப்ரவரி 29-ந்தேதி வணிகம் முடிவடையும்போது புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.8,470 கோடியாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 97.62% திரும்பப் பெறப்பட்டு விட்டதாகவும், இன்னும் சுமார் 8,470 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.