சென்னை: வரும் 26ந்தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள  நிலையில், தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களிலும், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள் மற்றும் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளத.

தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே இந்த ஆண்டு  குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த விழாவில்,  கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அதைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு நடைபெறுகிறது. இதன் காரணமாக,  போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பஸ் நிலையம் பகுதிகளிலும் போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் இரவு நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.