சென்னை:

நாட்டின் 71வது குடியரசு தினவிழாவையொட்டி தமிழகத்தில், வீர தீர செயலுக்கான குடியரசு தின விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி கவுரவித்தார்.

இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே  அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். இந்த விழாவில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர் . பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் குடியரசு தின விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் நாகையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜாவிற்கு வழங்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை சாமர்த்தியமாக மீட்டதற்காக ராஜாவுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் பிரிவில் ஏகேஷ், பிரிஸ்டன் பிராங்களின், வினித் சார்லிபன், ஈஸ்டர் பிரேம்குமார், தனலட்சுமி, வினோதினி, இந்திராகாந்தி மற்றும் பழனியப்பனுக்கு அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

சிறந்த காவல் நிலையத்திற்கான பிரிவில் கோவை நகரம் முதல் பரிசையும் , திண்டுக்கல் இரண்டாம் பரிசையும், தருமபுரி மூன்றாம் பரிசையும் பெற்றது.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.  திருப்பூர் மது விலக்கு காவல் ஆய்வாளர் சந்திர மோகன், திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜசேகரன், பண்ருட்டி காவல் ஆய்வாளர் பூங்கோதை ஆகியோர் இந்த பதக்கத்தை பெற்றனர்.

வேளாண்மைத் துறைக்கான சிறப்பு விருது ஈரோடு மாவட்டம் சென்னி மலையைச் சேர்ந்த யுவகுமாருக்கு வழங்கப்பட்டது.

கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் திருச்சியைச் சேர்ந்த ஷாஜ் முகமதுவிற்கு வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தைகளில் பொதுமக்களிடையே மத நல்லுணர்வை ஏற்படுத்தியமைக்காக விருது.