மும்பை: நாட்டின் சுதந்திர தினம் குறித்து தெரியாத மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்து விடுவதாக பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினம் அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மத்தியஅமைச்சர்  நாராயண் ராணே, உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.  “எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்பது கட ஒரு  முதல்வருக்கு தெரியாதது அவமானமாக உள்ளது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், அவரை  அறைந்திருப்பேன் என தெரிவித்திருந்தார்.

இது சர்ச்சையானது. உத்தவ் தாக்கரே கூறி விமர்சித்தற்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து கருத்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி. விநாயக் ராவத், மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட பிறகு, நாராயன் ரானே தனது மனக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். அவரை பதவியில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் சலசலப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் மீது சிவசேனா தரப்பில் காவல்துறையில் புகாரும் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மத்திய அமைச்சரின் வீட்டை நோக்கி  பேரணியாக சென்று சிவசேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்ய மும்பை போலீசார் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சர் ராணேவை ரத்ணகிரி என்ற பகுதியில் வைத்து மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.